மன்மோகன் சிங் மீதான வழக்கு தள்ளுபடி

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (05:38 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 

 
முந்திய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசு, 214 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்தது. இந்த  முறைகேடுகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
 
இதில், நிலக்கரி சுரங்க முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கூடுதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, மன்மோகன் சிங் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
 
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாக மன்மோகன் சிங் இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத் பராஸ்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பத் தேவையான முகாந்திரம் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.