தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த நடிகை ரோஜா!

Webdunia
சனி, 3 மே 2014 (10:33 IST)
நகரி தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகை ரோஜா. இவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனேயே அருகில் உள்ள வீட்டில் அவர் படுக்கவைக்கப்பட்டு குளூக்கோஸ் ஏற்றப்பட்டது.
ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
 

நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் ‘சுள்’ளென்று அடித்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப்பகுதியில் வீடு வீடாக நடந்து சென்ற அவர், கட்சிச்சின்னமான ‘மின்விசிறி’க்கு ஓட்டளிக்குமாறு வாக்காளர்களை கேட்டார்.
அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்தனர். டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
விரைந்து சென்ற மருத்துவ குழுவினர், ரோஜா உடல்நிலையை பரிசோதித்தனர். வெயில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது