ஆர்.கே நகர் படம் நிறுத்தம்! அஜித் பாணியில் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (14:25 IST)
ஆர்.கே நகர் படம் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தமிழ் சினிமாவிற்கு பல எதார்த்த படைப்புகளை தந்து சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குனர்களில் ஒருவர்  வெங்கட் பிரபு.  அந்தவகையில் இவரது அற்புத படைப்புகளான சென்னை-28, கோவா, சரோஜா போன்ற படங்களை ரசிகர்கள் இன்றளவும் விரும்புவர். மேலும் தல அஜித்தை வைத்து மங்காத்தா போன்ற மாபெரும் ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் வெங்கட் பிரபு. 
 
இவரது தயாரிப்பில் உருவாகி வந்த ஆர் கே நகர் படத்தை 'வடகறி' படத்தின் இயக்குநர் சரவணராஜன், இயக்கியுள்ளார். இப்படம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக வைத்தும் தற்கால அரசியலையும் சமூகச் சூழலையும் கருத்தில்கொண்டும் நகைச்சுவையுடன்  உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்தில், வைபவ் ஹூரோவாக நடித்துள்ளார். சம்பத், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ப்ரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 12 தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது இப்படப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெங்கட் பிரபு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சில பல காரணங்களால் ஆர்கே நகர் படம் நிறுத்தப்பட்டது. யார் பெயரையும் குறிப்பிட விரும்ப வில்லை. ஆதரவு அளித்து வரும் சினிமா விரும்பிகளுக்கு நன்றி. தல பாணியில் கூற வேண்டுமென்றால், வாழு வாழ விடு என்று கூறி வீடியோ பதிவை நிறைவு செய்துள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்