இன்றைய உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மெஹ்மதுல்லாவின் அசத்தல் சதத்தால் வங்கதேசம் அணி 288 ரன்களை குவித்துள்ளது.
ஹாமில்டனில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே வங்கதேச அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறியது. இவ்வணி 10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டுமே சேகரித்திருந்தது. பின்னர் இணைந்த சர்க்கர் மற்றும் மெஹ்மதுல்லா ஜோடி சற்று பொறுப்பாக ஆடியது.
தொடர்ந்து அசத்திய சர்க்கர் அரைசதத்தை கடந்து 51 ரன்னில் வெளியேறினார். பின் வந்த சாகிப், முஷ்பிகுர் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. எனினும் தனது அசத்தலான ஆட்டத்திறமையால் மெஹ்மதுல்லா சதத்தை எட்டினார். இது உலகக் கோப்பையில் மெஹ்மதுல்லாவின் 2 ஆவது சதமாகும். உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 2 சதங்கள் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. மெஹ்மதுல்லா 128 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.