அஸ்வின் சுழலில் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; இந்தியாவிற்கு 102 ரன்கள் இலக்கு

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (14:15 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவிற்கு 103 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21ஆவது லீக் ஆட்டம் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அம்ஜத் அலி, ஆண்ட்ரி பெரன்கர், கிருஷ்ணா சந்திரன் ஆகிய மூவரும் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
 
பின்னர் களமிறங்கிய குர்ரம் கான் 14 ரன்களில் நடையை கட்டினார். ஸ்வப்னில் பாடில் (7), ரோஹன் முஸ்தபா (2), அம்ஜத் ஜாவட் (2), முகமது நவீத் (6), முகமது தாஹிர் (1) எடுத்து வந்த வேகத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
அந்த அணியில் அதிகப் பட்சமாக ஷைமன் அன்வர் மட்டும் 35 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் மூன்று பேரை தவிர, மற்ற 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.