அடுத்தடுத்து அதிர்ச்சி! ஹாங்காங்கில் நடுவானில் ஏர் இந்தியா விமானம் கோளாறு! அவசரமாக தரையிறக்கம்!

Prasanth K

திங்கள், 16 ஜூன் 2025 (13:48 IST)

அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து ஆங்காங்கே விமானம் கோளாறு தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

 

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 என்ற போயிங் 787 ட்ரீம்லைனர் மாடல் விமானம் கீழே விழுந்து வெடித்ததில் விமான பயணிகளும், பொதுமக்களும் பலியானார்கள். அதை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களில் தர பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் இன்று மட்டுமே பல்வேறு விமான கோளாறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

தற்போது ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக விமான கட்டுப்பாட்டகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், உடனடியாக விமானம் மீண்டும் ஹாங்காங்கிற்கே திருப்பிவிடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் மீண்டும் ஹாங்காங்கிலேயே இறக்கிவிடப்பட்ட நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

அதுபோல ஜெய்ப்பூரில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி செயல்படாததால் கடந்த 5 மணி நேரமாக வியர்க்க விறுவிறுக்க விமானத்தில் பயணம் செய்து வந்ததாகவும், குறைகளை கேட்கக் கூட விமான சிப்பந்திகள் வரவில்லை என்றும் பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

 

காலை லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுவானில் எரிபொருள் வெளியேற்றப்பட்டு திருப்பிவிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை - லண்டன் விமானமும் மறுமார்க்கமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் புகாருக்கு உள்ளாகி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்