'தனி ஒருவரின் ஆட்சி': மீண்டும் துருக்கி அதிபராகும் எர்துவான்!

செவ்வாய், 26 ஜூன் 2018 (18:45 IST)
துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளார். இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும்.
 
துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்த ஒப்புதல் இப்போது செயல்படத் தொடங்கும்.
 
'தனி ஒருவரின் ஆட்சி' என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி தற்போது நுழைவதாக, எர்துவானை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முஹர்ரம் இன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அண்மைக் காலத்தில் துருக்கியில் நடந்த தேர்தல்களிலேயே மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் எர்துவான் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார். 
 
அவருக்கு அடுத்தபடியாக வந்த போட்டியாளர் இன்ஸின் பிரசாரம் உற்சாகத்தோடு இருந்தது. அவரது கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது. ஆனால், அவரால் 31 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.
 
மேற்கத்திய நாடுகள் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும், வெற்றி பெற்ற எர்துவானுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
 
மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு வழங்கிய தமது உரையில், வெகு விரைவில் புதிய அதிபர் ஆட்சி முறையை கொண்டுவருவதாக உறுதியளித்தார் எர்துவான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்