ஜி7 மாநாட்டிற்கு வராத ட்ரம்புக்கு போன் செய்த பிரதமர் மோடி! - என்ன பேசினார்?

Prasanth K

புதன், 18 ஜூன் 2025 (09:48 IST)

ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்காத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு ஃபோன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள கசன்ஸாகிஸில் நடைபெறும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கனடா வந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இதற்காக கனடா வந்திருந்த நிலையில், அவரை இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

 

ஆனால் வேறு சில அவசர வேலைகளால் ட்ரம்ப் மாநாடு முழுவதும் பங்கேற்காமல் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்நிலையில் பிரதமர் மோடி, ட்ரம்ப்க்கு ஃபோன் செய்து பேசியதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 

சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய நிலையில், பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியா மூன்றாம் தர மத்தியஸ்தங்களை ஏற்க விரும்புவதில்லை என்பது குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

மேலும் அமெரிக்கா தற்போது ஈரான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக செயலாற்றி வருவது குறித்தும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்