அமெரிக்க நாணயத்தில் முதன்முறையாக கருப்பின பெண்! – யார் இந்த மாயா ஏஞ்சலா?

புதன், 12 ஜனவரி 2022 (11:58 IST)
அமெரிக்க பெண் கவிஞரும், கருப்பினத்தவருமான மாயா ஏஞ்சலாவின் படம் முதன்முறையாக அமெரிக்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆரம்பம் முதலே கருப்பினத்தவர்கள் அடிமையாக நடத்தப்பட்டதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட கருப்பினத்தவர் மீதான நிறவெறி பாகுபாடுகள் ஆங்காங்கே நிலவி வருகிறது.

நிறவெறிக்கு எதிராக தனது கவிதைகளை ஆயுதமாக பயன்படுத்தியவர் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலா. தனது 7 வயதில் தன் தாயின் ஆண் நண்பர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஏஞ்சலா மனரீதியான பாதிப்பால் 6 வருடங்களாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதற்கு பின்னர் தன்னை முழுமையாக எழுதுவதில் ஈடுபடுத்திக் கொண்ட ஏஞ்சலா நிறவெறி, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக கவிதைகள் பலவற்றை எழுதினார். இவரது ”எனக்கு தெரியும், சிறைப்பறவைகள் ஏன் பாடுகின்றன?” என்ற புத்தகம் உலக அளவில் இவரது பெயரை புகழ்பெற செய்தது. 1992ல் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் பதவியேற்றபோது தானே எழுதிய கவிதையை பதவியேற்பு விழாவில் சமர்பித்தார் மாயா ஏஞ்சலா.

மாயா ஏஞ்சலா 2014ல் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது உருவப்படம் அமெரிக்க ¼ டாலர் நாணயத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்த நாணயத்தின் ஒரு பக்கம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் படமும், மறுபுறம் அமெரிக்க சின்னமான கழுகின் படமுமே இடம்பெற்று வந்தது. தற்போது கழுகிற்கு பதிலாக, வாஷிங்டனுக்கு இணையாக ஏஞ்சலாவின் படம் இடம்பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்