ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பலை தாக்கி மூழ்கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை தொடர்ந்து ஹெஸ்புல்லா, ஹவுதி என பல கிளர்ச்சியாளர்கள் குழு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக சவுதி வணிகத்திற்கே வில்லனாக விளங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பது, மாலுமிகளை பணயக்கைதிகளாக பிடித்துச் செல்வது என அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபமாக செங்கடலில் அவர்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது செங்கடலில் பயணித்த எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை தாக்கியுள்ளது ஹவுதி குழு. இதில் கப்பல் பணியாளர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கப்பலின் அடித்தளங்களை ஹவுதி குழு பலமாக சேதம் செய்ததால் கப்பல் மூழ்கத் தொடங்கியுள்ளது.
கப்பலில் இருந்து 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் கப்பலை மீட்கும் முயற்சிகள் தோல்வி அடைய அது முழுவதுமாக கடலில் மூழ்கியுள்ளது. இதில் பலக்கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் பொருட்கள் கடலில் மூழ்கியுள்ளன. செங்கடல் உலக வர்த்தக கடல் வழித் தடத்தில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகத்தை கொண்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் பிற வர்த்தக கப்பல்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K