நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்பு..! பிரதமர் மோடி வாழ்த்து..!!

Senthil Velan

திங்கள், 15 ஜூலை 2024 (14:08 IST)
நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி பதவியேற்றுக் கொண்டார்.  
 
நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 
 
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, நேபாள காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.   இதற்கிடையே, நேபாள நாடாளுமன்றத்தில் ஜூலை 12ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வியடைந்தார். 
 
இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சா்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். அதிபா் ராம் சந்திர பவுடலால் புதிய பிரதமராக சர்மா ஒலியை நேற்று நியமித்த நிலையில், இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.  அந்நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நான்காவது முறையாக பதவி ஏற்றார்.
 
நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாட்களுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். எனவே, கே.பி. சர்மா ஒலி இதில் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து:
 
நேபாள பிரதமராக பதவியேற்ற கே.பி. சர்மா ஒலிக்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்