ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர்களுக்கு புதிய முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு 20,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி, சிலிக்கான் பொறியியல், மென்பொருள் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த துறைகளில்தான் அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியா உள்பட சில வெளிநாடுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததை அடுத்து, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த முதலீடு அனைத்தையும் அமெரிக்காவிலேயே செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.