இந்த முறையில் காளான் பிரியாணியை செய்து பாருங்க !!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:24 IST)
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
காளான் - 500 கிராம்
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு  - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 12 பல்லு
முந்திரி - 3
பாதாம் - 2
பிஸ்தா - 2

தாளிக்க தேவையான பொருட்கள்:

நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் (மல்லித் தூள்) - 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை  - 1 கைப்பிடி



செய்முறை:

பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி வைக்கவும். புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும். காளானை அரிந்து இரண்டு முறை நன்றாகக் கழுவி வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். அனைந்து பொரிந்ததும், அரைக்க கூறப்பட்ட பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்பு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியை போட்டு லேசாக கிளறி, சுடுதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியது, கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும். சுவையான காளான் பிரியாணி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்