கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட கட்சி சேர, ஆச கூட மற்றும் சித்திரி புத்திரி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், சூர்யா நடிக்கும் சூர்யா 45 மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தி 29 படத்துக்கும் அவர்தான் இசை என சொல்லப்படுகிறது.
இதுவரை ஒரு படம் கூட அவர் இசையில் வெளியாகாமல் இருக்கும் நிலையில், 20 வயது இளைஞனுக்கு ஏன் இவ்வளவு பட வாய்ப்புகள் குவிகின்றன என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னர் ஒரு வியாபாரக் கணக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றால் அந்த படத்தின் ஹீரோ, இயக்குனர் ஆகியோரின் வணிக மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றார் போல அந்த படத்தின் ஆடியோ வியாபாரம் குறைந்த பட்சம் 6 கோடி ரூபாய் என்ற அளவில் தொடங்கி இன்னும் பல கோடி ரூபாய்க்கு விற்பனை ஆவது உறுதியாம். ஆனால் அவரின் தற்போதைய சம்பளம் ஒரு கோடி ரூபாய்க்குள்தான் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்யக் குவிவதாக சொல்லப்படுகிறது.