இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

vinoth

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:49 IST)
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்தது. அதன் பின்னர் வழக்கு நடந்து மாலைக் காட்சியில் இருந்துதான் படம் ரிலீஸானது.

இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள விக்ரம், அதில் “வீர தீர சூரன் படத்துக்கு பல சட்ட சிக்கல்கள் இருந்தன. இதனால் முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸாகவில்லை. இந்த படத்தை மக்கள் பார்க்கவேண்டும் என போராடினேன். இப்போது படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. என் ரசிகர்களுக்கு வித்தியாசமான, ஒரு மாஸ் படம் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த படத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்