திரையரங்கு உரிமையாளர்கள் நாளை சந்திப்பு : சினிமா பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா?

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (16:24 IST)
திரையரங்கு உரிமையாளர்கள் நாளை சந்திக்க இருக்கின்றனர். அதன்பிறகாவது சினிமா பிரச்னைக்கு முடிவு காலம் பிறக்குமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
டிஜிட்டல் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைத்துள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் தடை போட்டுள்ளது. சினிமா  நிகழ்ச்சிகள் கூட நடப்பதில்லை.
 
முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. டிக்கெட் விலையை முறைப்படுத்த வேண்டும், கம்ப்யூட்டர் டிக்கெட் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தயாரிப்பாளர் சங்கத்தால்  வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நடிகர் சங்கம், ஃபெப்சி போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில், நாளை மாலை 3 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதன்பிறகாவது சினிமாவுக்கு விடிவு காலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்