சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா, "இந்த படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும்!" என்று பெருமையாக கூறியிருந்தார். ஆனால், அந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்யாமல் பெரும் தோல்வியை சந்தித்தது எல்லாம் அறிந்ததே.
ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் அந்த நடிகரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் "500 கோடி", "1000 கோடி", "2000 கோடி" என கணக்கில்லாமல் கணக்கிடத் தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நடிகரின் உண்மையான மார்க்கெட் என்ன? அவர் நடித்த படங்களின் சராசரி வசூல் என்ன? என்பதுபோன்ற அடிப்படை விஷயங்கள்கூட தெரியாமல் கண்மூடித்தனமாக பட்டியலிடுகிறார்கள்.
இதன் விளைவாக, படம் ரிலீசான பிறகு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் அந்த நடிகரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு இலக்காகின்றனர். இதே நிலைதான் 'கங்குவா' திரைப்படத்திற்கும் நேர்ந்தது.
தற்போது, சூர்யாவின் ரசிகர்கள் அவரது புதிய படம் ரெட்ரோ டிரைலரை பார்த்து, படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும்!" என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதைக் கண்ட நெட்டிசன்கள், "நீங்க திருந்தாத ஜென்மங்களா?" என்று கலாய்க்கிறார்கள்.
தற்போதைய நிலையில், தமிழ் திரைப்படங்களில் அதிகபட்ச வசூல் செய்த படம் ரஜினிகாந்தின் ஜெயிலர். அது 650 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதுவே தமிழ்த் திரைபடங்களுக்கு மிகப்பெரிய சாதனை.
ஒரு திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டுமென்றால், அது உண்மையிலேயே ஒரு பான் இந்திய திரைபடமாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் விருப்பமும் மார்க்கெட்டும் உள்ள படமாக இருக்க வேண்டும்.
சூர்யாவின் படங்கள் பெரும்பாலும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்ததே அபூர்வம் என்று சிலர் வாதாடுகின்றனர். அவர்களின் நோக்கம் விமர்சனம் செய்வது அல்ல, உண்மையை சுட்டிக்காட்டுவதே என்கிறனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மேற்கொள்ளும் புகழ்ச்சிகளால், நடிகரின் பெயருக்கு தானே சேதம் என்று நேர்மையாக சிந்திக்கும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.