கடந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ். இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இந்த படத் தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக சிராஜ் என்பவர் எர்னாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் “இந்த படத்துக்காக நான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். அப்போது லாபத்தில் எனக்கு 40 சதவீதம் தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை எனக்கான தொகை வரவில்லை. ” என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிய உத்தரவிட்டு அவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது.
இதையடுத்து சமீபத்தில் மூவரும் கைது செய்யபப்ட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கைது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துபாயில் நடக்கவுள்ள விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள தனக்கு அனுமதிக்க வேண்டும் என சவுபின் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு சென்றால் அந்த நாட்டில் உள்ள வழக்கு சம்மந்தமான சாட்சியை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனப்து நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துவிட்டது.