தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை.ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து தனது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனையே இயக்க நியமித்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
வரும் வாரம் இந்த படத்தின் தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அஜித் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் என்னுடைய அடுத்த பட அறிவிப்பு ஜனவரி 2026- ல் வெளியாகும் எனக் கூறியுள்ளார். இதனால் அப்டேட்டுக்காகக் காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.