தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கைக் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ நான் என் வாழ்வில் மிகவும் சோகமாக இருந்தது ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் வந்தபோதுதான். இப்போது அந்த படத்தைப் பலரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. அந்த படத்தில் நிறைய உழைப்பும் பணமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.