சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில், இந்தப் படத்துடன், சில மாதங்களுக்குத் திரைப்படங்களை வெளியிடும் பணியை நிறுத்தி வைக்க உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், "சினிமா உலகை ரெட் ஜெயண்ட் தான் கட்டுப்படுத்துகிறது என்ற ஒரு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், தேர்தல் முடியும் வரை இனி வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆக வேண்டாம் என்று உதயநிதிக்கு அட்வைஸ் கூறப்பட்டுள்ளதாகவும், அதனால் 'கூலி' படத்தை அடுத்து வேறு எந்த படத்தையும் இந்நிறுவனம் வெளியிடாது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில், 'பராசக்தி' திரைப்படம் திமுகவுக்கு ஒரு முக்கியமான படம் என்பதால், அந்த படத்தை மட்டும் விதிவிலக்காக ரிலீஸ் செய்யலாம் என்றும், அல்லது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நெருக்கமானவர் மூலம் ரிலீஸ் செய்யலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.