ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Siva

வெள்ளி, 27 ஜூன் 2025 (18:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் முடிவாகவில்லை. ஆனால், நான்கு முன்னணி இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்லி, அடுத்த படத்தின் வாய்ப்பைப் பெற தீவிர முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, ஹெச். வினோத் ஒரு கதையை ரஜினிக்கு சொன்னதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதால், 'கதையைத் தயார் செய்யுங்கள்' என்று ரஜினி அவருக்கு அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது திடீரென சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா,  ரஜினிக்கு ஒரு கதை சொல்லியதாகவும், அந்த கதையும் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும், வெற்றிமாறன் அடிக்கடி ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லி வருவதாகவும், அதுவும் இன்னும் உறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது.
 
இவர்களுக்கு முன்பே, மாரி செல்வராஜ் ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாகவும், ஆனால் அந்தக் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர் ரஜினிக்காக வேறு ஒரு கதையை தயார் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே, ரஜினியின் அடுத்த படத்தை ஹெச். வினோத், விவேக் ஆத்ரேயா, வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகிய நால்வரில் யாருக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போது கோலிவுட்டில் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்