மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்! – ரஜினிகாந்த் உறுதி!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:56 IST)
நடிகர் மயில்சாமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரின் கடைசி ஆசையை தான் நிறைவேற்றுவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் அவருடைய உடல் நேற்று  முதலாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சினிமாத்துறையினர் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நடிகர் மயில்சாமி எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சிவபக்தர். ஒவ்வொருமுறை திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போதும் அங்கிருந்து எனக்கு போன் செய்வார். கடந்தமுறை அவர் தொடர்பு கொண்டபோது என்னால் பேச முடியவில்லை”

“மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. தனது தீவிர பக்தரை சிவபெருமான் சிவராத்திரி அன்று அழைத்து சென்றுவிட்டார். சிவன்கோவிலில் நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி ஆசைப்பட்டதாக கேள்விபட்டேன். கண்டிப்பாக அவரது கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன்” என கூறியுள்ளார்.

மயில்சாமிக்கு நெஞ்சுவலி ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தனது இந்த ஆசையை ட்ரம்ஸ் சிவமணியிடம் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்