கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இறைவி திரைப்படம் இரண்டு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளார் என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதில் திடீர் திருப்பமாக இறைவி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவே கார்த்திக் சுப்பாராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்குமான ஈகோ யுத்தத்தில் தயாரிப்பாளர் படத்தை முடக்கி விடுகிறார். அதனையொட்டி நிகழும் சம்பவங்களே இறைவி படத்தின் கதை. படத்தில் வரும் தயாரிப்பாளர் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவர்தான் படத்தில் வில்லன். தனது படத்தை ஒரு தயாரிப்பாளரே முடக்குவாரா? கார்த்திக் சுப்பாராஜ் படம் பண்ண பணம் போட்டவரும் ஒரு தயாரிப்பாளர்தான். தயாரிப்பாளர் இல்லாமல் கார்த்திக் சுப்பாராஜ் என்ற பெயர் வெளியே தெரிந்திருக்குமா என்று தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர் படம இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இப்படத்தை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு பார்த்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் படத்தை பார்த்தனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர்களை மிகவும் அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்காது. எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் இயக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இந்த தடையை விலக்கும் யோசனை இல்லை என்று தயாரிப்பாளர்கள சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.