பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !

புதன், 5 பிப்ரவரி 2020 (14:16 IST)
2020 நடிகை அமலா பாலுக்கு புது வெளிச்சம் பாயும் வருடமாக தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் பாரம்பரிய அழகும் மிளிரும்  குடும்ப பெண்ணாக “ராட்சசன்” படத்திலும், அனைவரையும் மிரளச்செய்த, துணிவான நடிப்பில் “ஆடை” படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமலா பால். 
 
பாடலுக்கு ஹீரோவுடன் நடனமாடும் துடுக்கு பெண்ணாக அல்லாமல், ஒவ்வொரு படங்களிலும் எவரும் ஏற்க தயங்கும் கதாப்பத்திரங்களில், அதிரடி காட்டி, அற்புத நடிப்பை வெளிப்படுத்தி, இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமலாபாலுக்கு இந்த 2020 வருடத்தில் எதிர்பார்ப்பு மிக்க பல புதுமையான படங்கள் வரிசையில் இருக்கிறது. அவரது நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் எதிர்பார்ப்பு மிக்க படைப்பாக, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 
 
இந்த நிலையில் அவரது மகுடத்தில் இன்னொரு மயிலறாக, அவரது திறமைக்கு அடையாளமாக, தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட் ஆளுமை தயாரிப்பாளர், இயக்குநர்  மகேஷ் பட் உருவாக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகி வேடமேற்கிறார் நடிகை அமலா பால்.இது குறித்து அமலா பால் கூறியதாவது....
 
சில ஆச்சர்யங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கையில் வந்துவிடும். அப்படியானது தான் இயக்குநர் மகேஷ் பட் இடமிருந்து கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு. அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நாயகிகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில் உருவாக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் வலுவனாது, உணர்வுப்பூர்வமானது. காலத்தால் அழியாத  நிலைத்து நிற்கும் படைப்புகளை தருபவர் அவர். அவரது பட்டறையில் கற்றுக்கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இத்தொடரின் இயக்குநர் புஷ்ப்தீப் மிகத் திறமையானவர். மிகச்சிறந்த தொலை நோக்கு பார்வை கொண்டவர். திரையில் என்ன வர வேண்டும், அதை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதில் மிகத்தெளிவானவராக உள்ளார். அவரது திரைக்கதையை  படித்த பிறகு இந்த தொடர் ஒரு அற்புதமான படைப்பாக வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்த இணையத்தொடர் 1970 களில் வெற்றிக்கு போராடும் இயக்குநருக்கும், பிரபலமாக இருக்கும் நடிக்கைக்கும் இடையே உள்ள உறவை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. Chhichhore ஹிந்தி திரைப்படத்தில் அட்டகாச நடிப்பின் மூலம் மகேஷ் பட்டின் மனம் கவர்ந்த நடிகர் தாஹிர் இத்தொடரில் இயக்குநராக நடிக்கிறார். அமலா பால் பிரபல நடிகையாக நடிக்கிறார். சினிமா உலகில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட ஆளுமையான மகேஷ் பட் மற்றும் மிகத் திறமை வாய்ந்த இயக்குநர் புஷ்ப்தீப் பரத்வாஜ் ஆகிய இருவரும்,  இந்த தொடரின் நாயகி கதாப்பாத்திரத்திற்காக, இந்தியாவின் அனைத்து பிரபல நாயகிகளையும் பரிசீலித்து பின் மிகப்பொருத்தமனாவர் என அமலா பாலை, இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். 
 
நடிகை அமலா பாலுக்கும் இந்தக்கதாப்பாத்திரம் சவாலான ஒன்றாக அமைந்தது. வட இந்திய பெண்ணாக  நடை, உடை, பாவனை பயிற்சி எடுத்து மொழிப்பயிற்சிகளை மூன்று மாதங்கள் மேற்கொண்டு இறுதியாகவே  இந்தக்கதாப்பாத்திரத்திற்கு தயாராகியுள்ளார். தற்போது அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்”, “கடாவர்” மற்றும் பாலிவுட் “கோஸ்ட் ஸ்டோரீஸ்” தெலுங்கு ரீமேக் ஆகியவை தாயாரிப்பின் பல்வேறு நிலைகளில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்