'பரியேறும் பெருமாள்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து, குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் மாரி செல்வராஜ். இன்று நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில், தனது முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கதையை முதலில் நடிகர் அதர்வாவிடம் தான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதர்வா நடித்துள்ள 'டிஎன்ஏ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில், "நான் முதன்முதலில் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் கதையை அதர்வாவிடம் தான் சொன்னேன். அவருக்கு அது ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை," என்றார்.
"நடிகர் முரளி அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், அவரது மகன் அதர்வா நடித்த 'பாணா காத்தாடி' திரைப்படத்தைப் பார்த்தேன். 'பரியேறும் பெருமாள்' படத்தின் கதாநாயகனுக்கு அதர்வா பொருத்தமாக இருப்பார் என்று அப்போதே முடிவு செய்தேன். அவரிடம் சென்று நான் கதையைச் சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால் வருத்தப்பட்டேன்.
அதன் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவரை மீண்டும் சந்திக்கிறேன். 'டிஎன்ஏ' திரைப்படம் அதர்வாவுக்கு ஒரு முக்கியமான படமாக அமையும். மேலும் பல உயரங்களை அடையக்கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது," என்று மாரி செல்வராஜ் அதர்வாவை வெகுவாக பாராட்டினார்.