பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பாடகர்களால் மேடையில் பாடப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சு வண்ணப் பூவே, விண்வெளி நாயகா மற்றும் முத்த மழை போன்ற பாடல்கள் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளன.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய செக்க சிவந்த வானம் வரை அனைத்துப் படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதினார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி ஒரு தலைமுறை இளைஞர்களின் ஆதர்ஸப் பாடல்களாக இருந்தன. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் வைரமுத்துவைப் பயன்படுத்தாமல் இளம் பாடல் ஆசிரியர்களைப் பயன்படுத்தினார். பாடல்கள் பெரும்பாலானவை ஹிட்டானாலும், ரசிகர்கள் பலரும் வைரமுத்து இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக பாடல்கள் வந்திருக்கும் எனக் கருத்து தெரிவித்தனர். இப்போது தக் லைஃப் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் அதே கருத்து எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.