நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தில் அறிமுகமான அனுபமா, சாய் பல்லவி மற்றும் மடோனா ஆகிய மூவருமே இன்று முன்னணி நடிகைகளாக உள்ளனர். பிரேமம் படம்தான் வெகுஜன ரீதியாக தமிழ்- மலையாள சினிமா பிணைப்புக்கு ஒரு முக்கியமானக் காரணமாக அமைந்தது என சொல்லலாம். ஆட்டோகிராஃப் என்ற படத்தில் நாம் ஏற்கனவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், அதை சொன்னவிதம் இளைஞர்களைப் பெரியளவில் கவர்ந்தது. அதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் மலையாளப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர் என்று சொன்னால் மிகையாகாது.