காங்கிரஸ் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் அ.தி.மு.க வில் இணைந்தார்

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (22:53 IST)
கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் செல்வி ஜோதிமணியின் கட்சி செயல்பாடு பிடிக்காத நிலையில், ஆங்காங்கே அக்கட்சியினர் (காங்கிரஸ் கட்சியினர்) பலர் பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலிருந்து தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு சிலர் நேரிடையாகவே மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் தீவிர ஆதரவாளருமான சுரேகா பாலசந்தர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் இவரது தலைமையில் மகிளா காங்கிரஸ் நிர்வாகி பொன்னரசி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மதுமிதா ஆகியோரும் அ.தி.மு.க வில் இணைந்தனர். மேலும், கரூர் தெற்கு நகர அ.தி.மு.க செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர செயலாளர் கார்த்திக் மற்றும் அ.தி.மு.க நிர்வாகி முருகேஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுரேகா பாலசந்தர்., கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினை அழிக்காமல் ஓயமாட்டார். மேலும், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போதே மத்திய அமைச்சர் கனவோடு கட்சியின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லை, மேலும் கட்சியின் உண்மை விசுவாசிகளை மதிக்காமல் அவரே அவருக்கு ஒரு தனி வட்டம் போட்டுக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினர் போல், செயல்படாமல், தி.மு.க கட்சிக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினர் போல் செயல்பட்டு வருவதாகவும் அ.தி.மு.க வில் இணைந்த போது தெரிவித்தார்.
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை தி.மு.க கட்சியில் இவரே சேர்த்து விடுவது போல உள்ளதால் தான் அன்னை சோனியாவிற்கு பதிலாக அம்மா ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினேன், வருங்காலத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஐயா ஒ.பி.எஸ் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வழியில் அ.தி.மு.க கட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்