உங்க ஆட்டம் எங்ககிட்ட பலிக்காது: கோலிக்கு சவால் விடும் பாகிஸ்தான் கோச்!

வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:26 IST)
கிரிக்கெட் விளையாடும் ஒன்பது நாடுகளிலும் சென்றும் சதம் அடித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் சதம் அடிக்க முடியாது என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.
 
இந்திய அணியின் கேப்டனாக 29 வயதான விராட் கோலி செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
 
இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அபாரமாக விளையாடி வருகிறார் கோலி. இந்நிலையில் அவரை சீண்டும் விதமாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசியுள்ளார்.
 
விராட் கோலி சிறந்த வீரர். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் அவர் பாகிஸ்தானில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் சேர்ப்பது கடினம் என சீண்டியுள்ளார்.
 
மேலும் இந்தியா விரைவில் பாகிஸ்தானில் விளையாடும் என நம்புவதாக கூறியுள்ளார். அவர் கோலியை சீண்டும் விதமாக இந்தியாவை பாகிஸ்தான் வந்து விளையாட அழைக்கிறார். கடைசியாக இந்தியா பாகிஸ்தான் அணியுடன் 2008-ஆம் ஆண்டு விளையாடியது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் சூழல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து வருகிறது.
 
இந்நிலையில் இந்திய வீரர் கோலிக்கு சவால் விடுவதன் மூலம் அவரை சீண்டி இந்திய அணியை பாகிஸ்தான் வர வைக்கலாம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நினைப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்