செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

Prasanth Karthick

திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:31 IST)

ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் அணி மற்றும் பெண்கள் அணி தொடர்ந்து தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது.

 

 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11ம் தேதி ஹங்கேரியில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன.

 

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஓபன் பிரிவில், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர்.

 

மகளிர் பிரிவில் அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இதுவரை இரண்டு பிரிவுகளிலும் தலா 5 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்திய அணி இரண்டிலுமே தலா 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 11 சுற்று முடிவில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும்.

 

கடந்த முறை இந்தியாவில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணி இந்த முறை தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அடுத்து 6வது சுற்றில் இந்திய ஓபன் பிரிவு ஹங்கேரியுடனும், பெண்கள் அணி அர்மீனியாவுடனும் மோத உள்ளன.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்