சரிவில் இருந்து மீட்ட ஸ்ரேயாஸ் ஜடேஜா ஜோடி… முதல் நாள் முடிவில் 258/4

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (16:44 IST)
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 258 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.

நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் இன்று கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டாஸை வென்ற இந்திய கேப்டன் அஜிங்க்யே ரஹானே பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். இதையடுத்து இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த புஜாரா 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவோடு கூட்டணி அமைத்து அரைசதம் கடந்தார் சுப்மன் கில். 52 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, சிறு இடைவெளியில் கேப்டன்ன் ரஹானே 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் அதன் பிறகு ஸ்ரேயாஸ் மற்றும் ஜடேஜா ஜோடி நங்கூரம் பாய்ச்சியது போல நின்று ரன்களை சேகரித்தது. இதையடுத்து மூன்றாவது செஷனில் விக்கெட்டைக் கொடுக்காமல் முதல் நாளை முடித்துள்ளது. ஆட்ட முடிவில் 258 ரன்கள் சேர்த்து நிறைவு செய்துள்ளது. ஸ்ரேயாஸ் 75 ரன்களோடும் ஜடேஜா 50 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்