10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

Siva

திங்கள், 19 மே 2025 (07:26 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில், டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அதில், குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. இதன் அடிப்படையில் அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
 
நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து, இருபது ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் ஆட்டம் இழக்காமல்  கடைசி வரை நின்று, 112 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனைத் தொடர்ந்து, 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியின் சாய் சுதர்சன் மிக அபாரமாக விளையாடி, 108 ரன்கள் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உள்ளன. அவருக்கு துணையாக, கேப்டன் கில் 93 ரன்கள் அடித்தார். இதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.
 
இதனை அடுத்து, 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி குஜராத் அணி 200 ரன்கள் எடுத்து, 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள், 17 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. மும்பை நான்காவது இடத்தில் உள்ளது.
 
நேற்றைய தோல்வியின் காரணமாக, டெல்லி அணி 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால்தான், டாப் நான்குக்கு செல்ல வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இன்னொரு போட்டியில், பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்