2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: 6 அணிகளுக்கு அனுமதி..!

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (13:56 IST)
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில், கிரிக்கெட் போட்டி 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் இடம் பெறுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஐசிசி முழுநேர உறுப்பினர் நாடுகள் 12 இருந்தாலும், ஒலிம்பிக்ஸில் வெறும் 6 அணிகள் மட்டும் விளையாடும் வாய்ப்பு பெறுவதை அடுத்து ஆர்வம் கூடியுள்ளது.
 
2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டி20 வடிவில் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் இடம்பெறவிருக்கின்றனர். இதன் மூலம் மொத்தமாக 90 வீரர்கள் ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்க வாய்ப்பு பெறுகின்றனர்.
 
 அமெரிக்கா ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாடாக இருப்பதால், அமெரிக்க அணி நேரடி வாய்ப்பு பெற்றுள்ளது. மீதமுள்ள 5 அணிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகவில்லை. தேர்வு முறை மற்றும் பங்கேற்கும் அணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடைசியாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்