பேஸ்புக்கில் சிறுமிக்கு காதல் வலை! – கடத்திக் கொண்டு ஊர் ஊராக சென்ற இளைஞர் கைது!

புதன், 5 ஆகஸ்ட் 2020 (12:36 IST)
திண்டுக்கலில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலமாக பழகிய சிறுமியை கடத்திக் கொண்டு ஊர் ஊராக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபின். இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் உறுப்பினராக உள்ள இவர் பேஸ்புக் மூலமாக சிறுமிகளுக்கு காதல் வலைவீசி வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறாக திண்டுக்கலை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு காதல் ஆசையை ஏற்படுத்திய அவர் பாலியல் ரீதியாகவும் சிறுமியை தூண்டியதாக தெரிகிறது.

இந்நிலையில் காதல் மயக்கத்தில் இருந்த சிறுமியை நேரில் சந்திக்க வர சொன்ன முகமது ஷபின் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார். வீட்டை விட்டு சென்ற சிறுமி திரும்ப வராததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மதிரை டவுன் மகளிர் போலீஸ் ஷபினின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து அவரை கண்டுபிடித்துள்ளனர்.

அவர் பொள்ளாச்சியில் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து பொள்ளாச்சி விரைந்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து சிறுமியோடு மீண்டும் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். தொடர்ந்து ட்ராக் செய்த போலீஸார் திண்டுக்கலில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வைத்து ஷபினை கைது செய்ததோடு சிறுமியையும் மீட்டனர். சிறுமியின் சம்மதம் இல்லாமல் அவர் கடத்தி சென்றதாக தெரிய வந்ததையடுத்து அவர்மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்