சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் அவரது கணவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூரின் 26வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்த கோமதி என்பவர், தனது கணவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று கோமதி தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் கோமதியை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
முதற்கட்ட விசாரணைகளில், கோமதிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால்தான் ஸ்டீபன் ராஜ் தனது மனைவியை கொலை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.