அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

Mahendran

செவ்வாய், 1 ஜூலை 2025 (13:53 IST)
மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், அஜித்குமார் மரணம் குறித்துக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். "தனிநபர் கொலை செய்தால் கொலை வழக்காக பதிவு செய்யப்படும்போது, அரசாங்கம் கொலை செய்தால் மட்டும் ஏன் கொலை வழக்காக பதிவு செய்யப்படுவதில்லை?" என்று அவர் வினவியுள்ளார். அஜித்குமார் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
9 பவுன் நகையைத் திருடிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், அஜித்குமாரை காவல்துறையினர் மாறி மாறி கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது வாயிலும், கண்ணிலும் மிளகாய் பொடியை தூவி சித்திரவதை செய்துள்ளனர் என்றும், இது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்தார்.
 
மேலும், சம்பவ இடத்தில் இருந்த யாருமே போலீஸ் சீருடையில் இல்லை என்றும், லுங்கி கட்டிக்கொண்டும், அரை டவுசர் அணிந்துகொண்டும் வந்திருப்பதை பார்க்கும்போது, காவல்துறையினருடன் சேர்ந்து மேலும் சிலரும் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
"தனிநபர் கொலை செய்தால் கொலை வழக்காகப் பதிவு செய்கிறீர்கள்; ஆனால், அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை?" என்று அவர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
 
மொத்தத்தில், அஜித்குமாரின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்