பேர் என்னோடதுதான்; கட்சி அப்பாவோடது! – பதுங்கி பாய்கிறரா விஜய்?

வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:34 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் கட்சி தொடங்கியுள்ளது பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் கடந்த 30 ஆண்டுகளாக பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு அடுத்ததாக அதிகம் சர்ச்சைக்குள்ளானது நடிகர் விஜய் அரசியல் பிரவேசம். கடந்த பல ஆண்டுகளில் தொடர்ந்து அரசியல் குறித்து தனது பாடல்களிலும், படங்களிலும் விஜய் பேசி வந்தாலும், அந்த படங்கள் அரசியல் கட்சிகளால் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகின்றன.

சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின்போதும் சில அரசியல் கட்சிகளால் பிரச்சினை ஏற்பட அங்கு விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டது பெரும் வைரலானது. ஒவ்வொரு முறையும் தனது பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிகளால் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் வந்து விடுவதால் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேச்சை குறைத்துக் கொண்டிருந்தார்.

தற்போது கொரோனா பாதிப்பு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் பொங்கலுக்கு மாஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதே சமயம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி விஜய் பெயரில் கட்சி தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் தெரிவித்துள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி தொடங்கியுள்ள கட்சியில் விஜய் மக்கள் மன்றத்தினரும் உள்ள நிலையில் விஜய்க்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், மாஸ்டர் பட வெளியீட்டில் பிரச்சினை வராமல் இருக்க விஜய் பதுங்கி பாய திட்டமிடுகிறாரா? என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்