பாஜக வேல் யாத்திரைக்கு ஆள் சப்ளை செய்யும் அதிமுக? திருமா காட்டம்!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:27 IST)
வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக நடத்தும் நாடகத்துக்கு அதிமுகவும் துணையா? என திருமாவளவன் கேள்வி. 
 
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து காட்டமாக அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக நடத்தும் நாடகத்துக்கு அதிமுகவும் துணையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்தது. 
 
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் யாத்திரை என்ற பெயரில் பாஜகவினர் நாடகம் நடத்துவதையும் ஆங்காங்கே கூடுபவர்கள் சிலரைக் கைது செய்து மாலையில் விடுவிப்பதையும் பார்க்கும்போது இது பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து ஆடும் நாடகமா என்ற சந்தேகமே எழுகிறது.
காவல் துறையின் தடையை மீறி பாஜகவினர் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு ஊர்களில் யாத்திரை நடத்தும் போது அவர்களை ரிமாண்ட் செய்யாமல் விடுவிப்பது ஏன்? ஒப்புக்கு கைது செய்து மாலையிலேயே விடுவிப்பது எந்தவிதமான அணுகுமுறை? நாங்கள் அடிப்பதுபோல அடிக்கிறோம் நீங்கள் அழுவது போல அழுங்கள் என்று சொல்வதாகவே இது இருக்கிறது.
 
பாஜக யாத்திரையில் பங்கேற்பவர்கள் எவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை, முகக்கவசமும் அணிவதில்லை. இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதன்மூலம் கொரோனா பரவுவதற்குத் தமிழக அரசே உடந்தையாக இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
 
அத்துடன், பாஜகவின் யாத்திரைக்கு அதிமுகவினர் தான் ஆட்களைத் திரட்டி வந்து சேர்க்கிறார்கள். பாஜக நடத்தும் யாத்திரை என்று சொல்லப்பட்டாலும் அதற்கு ஆள் சப்ளை செய்யும் வேலையை அதிமுகவே செய்து வருகிறது என்பதையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்