முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

Mahendran

சனி, 25 மே 2024 (08:23 IST)
முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கேரளா இடையே இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக கட்ட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கேரளா அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கவியரசு வைரமுத்து இது குறித்து ஆவேசமான பதிவை கவிதை வடிவில் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவை ஏதோ:
 
முல்லைப் பெரியாறு
என்பது நதியல்ல;
தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம் 
 
'வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி' என்று
சிலப்பதிகாரம் பாடிய
ஜீவநதிக்குக்
கல்லறைகட்ட விடமாட்டோம்
 
வரலாறு மற்றும்
புவியியல் அடிப்படையில்
முல்லைப் பெரியாறு மீது
தமிழர்களுக்குத் தார்மீக
உரிமை இருக்கிறது
 
தமிழ்நாட்டரசு 
மற்றும்
உச்ச நீதிமன்றத்தின்
ஒப்புதல் இல்லாமல்
அணைகட்ட முடியாது என்ற
சட்ட உரிமையும் எமக்கிருக்கிறது
 
ஐந்து மாவட்டங்கள்
நெல்லற்றுப் புல்லற்றுப்
பாலைவனமாக விடமாட்டோம்
 
கேரளத்தை மதிக்கிறோம்
ஆனால்
முல்லைப் பெரியாற்றைத்
துதிக்கிறோம்
 
முல்லைப் பெரியாறு 
எங்கள் தாய்ப்பால்;
தாயின் மார்பகத்தை
அறிந்தோ அறியாமலோ
அரிந்து விடாதீர்கள்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்