மிரட்டும் டெங்கு ; 11744 பேர் பாதிப்பு ; 40 பேர் பலி - அரசு அறிக்கை

புதன், 11 அக்டோபர் 2017 (15:53 IST)
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. கொசுக்களால் உருவாகும் இந்த காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்துள்ளனர்.
 
அதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு நோய் வராமல் தப்பிப்பது எப்படி?, டெங்குவின் அறிகுறிகள் என்ன? என்பது போன்ற அட்டவணைகள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
ஒருபுறம், டெங்குவை ஒழிக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
 
இந்நிலையில், பூச்சிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து தமிழக அரசு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் 9ம் தேதி வரை 40 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 11 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடபப்ட்டுள்ளது.
 
அதேபோல் கடந்த நடப்பாண்டில் சிக்கனி குனியா நோயால் 85 பேரும், மலேரியாவால் 8524 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறிநாய் கடித்து 13 பேர் பலியாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்