வேதா இல்லம் அரசுடமையானது: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி, 25 ஜூலை 2020 (12:32 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை.  
 
இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என அரசு விரும்பியது. 
 
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் வழக்கு தொடர, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.  
 
எனவே, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக ரூ.32 கோடி என மொத்தம் ரூ.68 கோடியை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது.  
 
எனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வேதா நிலையத்திற்கு உரியவர்கள் இழப்பீட்டு தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதால் வேதா நிலையம் அரசுடமையானது எனவும் நினைவு இல்லத்தின் ஒரு பகுதியை முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக மாற்றுவது சாத்தியமில்லை எனவும் தமிழக அரசு தெளிவாக விளக்கியும் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்