பொன்முடி வகித்து வந்த பதவிக்கு திருச்சி சிவா நியமனம்: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (12:01 IST)
அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, அவரது துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன், திமுக கூட்டம் ஒன்றில் பேசும் போது, பொன்முடி விலைமாது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் கிளம்பியது. திமுக எம்.பி. கனிமொழியும் தனது எக்ஸ்   பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், பொன்முடி வகித்துவந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
 
இந்நிலையில், பொன்முடி வகித்த அந்த பதவிக்கு தற்போது திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக சட்டவிதி 17, பிரிவு 3-ன் படி, திருச்சி சிவா எம்.பி. அவர்களை, அவரது தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவித்து, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி சிவா வகித்த வந்த பதவிக்கு விரைவில் வேறொருவர் நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்