என்னை அரசியலில் இருந்து நீக்க சதி நடக்கிறது: டிடிவி தினகரன் ஆவேசம்!

வியாழன், 9 நவம்பர் 2017 (11:41 IST)
டிடிவி தினகரன், சசிகலா தொடர்புடைய பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் சில குற்றச்சாட்டுகளையும், விளக்கங்களையும் வைத்துள்ளார்.


 
 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் காலை 8.30 மணிக்கு வந்தார். அவரும் போய்விட்டார். காவல் அதிகாரிகள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை.
 
பாண்டிச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் சோதனை நடப்பதாக கேள்விப்பட்டேன்.  நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. எங்களை மிரட்டிப்பார்க்க இந்த சோதனை நடக்கிறது. எதையும் சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு.
 
என்னை சிறைக்கு அனுப்பினாலும் வெளியே வந்து பின்னால் இருந்து செயல்படுபவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். இந்த மிரட்டல்களை சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு. பொய் வழக்கு போடுவதற்கு பெயர் போனது மாநில அரசு. சில நாட்களுக்கு முன்னர் எந்த தவறும் செய்யாத கார்ட்டூனிஸ்ட் பால கைது செய்யப்பட்டார். அவரது கார்ட்டூனில் எந்த தவறும் இல்லை. அப்படி இருந்தாலும் மான நஷ்ட வழக்கு தான் தொடர வேண்டும் என தினகரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்