மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி..! நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய தகவல்..!!

Senthil Velan

புதன், 17 ஏப்ரல் 2024 (15:22 IST)
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய,  மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது,  தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்,  மூன்று மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!!
 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்