டாஸ்மாக்கில் ஓட்டை; பீரை மட்டும் திருடிய மதுப்பிரியர்கள்! – வேலூரில் நூதன திருட்டு!

திங்கள், 31 அக்டோபர் 2022 (10:01 IST)
வேலூரில் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் துளையிட்ட திருடர்கள் பீர் பாட்டில்களை திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காட்பாடியில் உள்ள காங்கேயநல்லூரில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேற்பார்வையாளராக புகழேந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் கடையை அவ்வபோது செல்போனிலேயே புகழேந்தி பார்த்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

காலை கடையை ஆராய செல்போனை பார்த்தபோது அதில் சிசிடிவியுடனான இணைப்பு செயல்படவில்லை. இதனால் உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ: குஜராத் தொங்கு பால விபத்து; 140 பேர் பலி! – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் தூக்கி சென்றுள்ளனர். கடையில் திருடப்பட்ட பொருட்கள் குறித்து மது இருப்பை சோதனை செய்ததில் 10 பீர் பாட்டில்கள் மட்டும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பீர் திருடர்களை கண்டறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்