திடீரென தீப்பற்றி ஏரிந்த கார் - விமான நிலையம் செல்லவிருந்த 3 பேர் உயிர் தப்பினர்!

J.Durai

வெள்ளி, 7 ஜூன் 2024 (11:16 IST)
தமிழக - கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலை சுமார் 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.
 
தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளும், இடுக்கி மாவட்டம் வழியே கொச்சி ஏர்போர்ட் செல்லும் பயணிகளும் இந்த மலைச் சாலை வழியாக பயணிப்பது வழக்கம்.
 
இந்நிலையில், மதுரையில் இருந்து கார்த்திக் ராஜா, ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டிற்குச் செல்வதற்காக கொச்சி ஏர்போர்ட்டிற்கு போடி மெட்டு மலைச்சாலை வழியாக காரில் பயணம் செய்துள்ளனர்.
 
அப்போது 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென கார் நின்று விடவே காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார்.
 
அப்போது, எதிர்பாராத விதமாக காரின் எஞ்சினில் திடீரென்று புகை கிளம்பியதுடன் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட 3 பேரும் தங்கள் உடைமைகளோடு உடனடியாக காரை விட்டு இறங்கினர்.
 
சில நிமிடங்களில் தீ கார் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரிந்த கார், முற்றிலும் எரிந்து நாசமானாது. 
 
இந்த சம்பவம் குறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்