புனே சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்து.. ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில்..!

Mahendran

சனி, 1 ஜூன் 2024 (14:00 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் புனே நகரில் 17 வயது சிறுவன் போதையில் காரை ஓட்டி வந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
 
இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு சில மணி நேரங்களில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்தது என்பதும் அந்த சிறுவனின் தவறுக்கு நீதிபதி கட்டுரை எழுத சொன்னதாகவும் தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறார் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி சிறுவன் செய்த தவறை மறைக்க அவரது தாத்தா முயன்றதாகவும் ஓட்டுனரை பழி ஏற்கும் படி வற்புறுத்தி கூறப்பட்டதை அடுத்து அவரது தாத்தா கைது செய்யப்பட்டார்.
 
அதேபோல் சிறுவனை தப்பிக்க வைக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக அந்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிறுவனின் தாயாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற மருத்துவர் உடன் சதியில் ஈடுபட்டதாக கூறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் செய்த ஒரு தவறு காரணமாக தற்போது அந்த சிறுவனின் ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்