குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசி கொன்ற தாய்! – கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 3 அக்டோபர் 2019 (17:53 IST)
கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சத்தியவதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன.

கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சத்தியவதி தன் குழந்தைகளோடு தன் தாயார் வீடான சாத்தப்பாளையத்திற்கு சென்றுள்ளார். சிறுது காலம் அங்கு தங்கியிருந்தவரை அவரது பெற்றோர்கள் அறிவுரை சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதற்கு பிறகும் மணிகண்டன் குடித்து விட்டு வருவது, அடித்து துன்புறுத்துவதுமாக இருந்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த சத்தியவதி தூங்கி கொண்டிருந்த தன் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சத்தியவதியை கைது செய்துள்ளனர். மேலும் கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாயே தன் குழந்தைகளை கால்வாயில் வீசி கொன்ற கொடூர சம்பவம் கடலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்