போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

Siva

செவ்வாய், 24 ஜூன் 2025 (16:00 IST)
சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாகன ஓட்டிகளை குறிவைத்து, புதிய பாணியில் சைபர் மோசடி அரங்கேறி வருகிறது. 
 
பெரும்பாக்கத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், போலி போக்குவரத்து காவல் துறையின் SMS-ஐ நம்பி ₹12,600 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எழில் நகரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு, 'போக்குவரத்து போலீஸ்' பெயரில் ஒரு SMS வந்தது. அதில், அவரது இருசக்கர வாகன எண் குறிப்பிடப்பட்டு, அபராதம் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது வாகனம் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டதால், அந்த செய்தி நம்பகத்தன்மை கொண்டதாக செந்திலுக்கு தோன்றியுள்ளது.
 
செய்தியில் இருந்த இணைப்பை கிளிக் செய்து அபராதத்தை சரிபார்க்க முயன்றார். உடனடியாக, அவரது செல்போன் செயலிழந்தது. அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு சில நிமிடங்களிலேயே OTP வந்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ₹12,600 திருடப்பட்டது.
 
பணத்தை இழந்த அதிர்ச்சியில் செந்தில், சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு  அழைத்து புகார் அளித்தார். சைபர் கிரைம் அதிகாரிகள், போலி இ-சலான் SMS மூலம் மோசடிக்காரர்கள் செயல்படுவதாக தெரிவிக்கின்றனர். இணைப்பைக் கிளிக் செய்தால், ஃபிஷிங் தளங்களுக்கு சென்று, வங்கி விவரங்களை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
 
பொதுமக்கள், அறியாத இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அபராதங்களை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு இ-சலான் போர்டல் அல்லது 'mParivahan' செயலி மூலம் மட்டுமே சரிபா பார்க்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்